அதாவது, தமிழகத்தைப் பொருத்தவரை மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்ற நான்கு பிரிவுகளைப் அடிப்படையிலேயே அரசு சலுகைகள் அமைகின்றன. சாதியோ அதன் உட்பிரிவோ இதற்குத் தேவைப்படுவதில்லை! எனவே, "இனி வருவாய்த் துறையினர் தருகின்ற சான்றிதழ், சாதியைக் குறிக்கும் சான்றிதழாக இருக்காது. மேற்கண்ட நான்கில் ஒரு பிரிவைக் குறிப்பிடும் சான்றிதழாகத்தான் இருக்கும் என்பதையே சட்டமாக்கி, அதை முழுமையாக அமல்படுத்தலாம்" எனப் பரிந்துரைக்கிறது அந்த கட்டுரை...
இதை அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினால் இதுவே சட்டப் பூர்வமாக சாதிகளை ஒழிக்க நாம் எடுக்கும் முதல் அடியாக இருக்கும்... ஆனால் இதை அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்... சாதிகளை வைத்து பிழைப்பு நடத்தும் நம் ஆட்சியாளர்கள் இதற்கு முன் வருவார்களா??
ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரை:
"பள்ளிக்கூடங்களில் சாதியைக் குறிப்பிட்டே தீரவேண்டும் என்று மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியுள்ளது மறுமலர்ச்சிக்கான புதிய திருப்பு முனை!
சாதிகள் பட்டவர்த்தனமாகத் துவங்குவதே, "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று உரக்க ஓதப்படும் பள்ளிக்கூடங்களில் இருந்துதான்! இன்றைக்கும் சில கிராமத்துப் பள்ளிகளில் சாதி அடிப்படையிலான சலுகைகளை விநியோகிக்க, மாணவர்களை சாதிப் பெயர் சொல்லி அழைப்பதையும், அவர்கள் கூனிக் குறுகுவதையும் காண முடிகிறது!
தமிழகத்தை எடுத்துக்கொண்டால்... மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்ற நான்கு பிரிவுகளைப் பொறுத்தே அரசு சலுகைகள் அமைகின்றன. சாதியோ அதன் உட்பிரிவோ இதற்குத் தேவைப்படுவதில்லை! எனவே, "இனி வருவாய்த் துறையினர் தருகின்ற சான்றிதழ், சாதியைக் குறிக்கும் சான்றிதழாக இருக்காது. மேற்கண்ட நான்கில் ஒரு பிரிவைக் குறிப்பிடும் சான்றிதழாகத்தான் இருக்கும்" என்பதையே சட்டமாக்கி, அதை முழுமையாக அமல்படுத்தலாம்.
இதைச் செய்யும்போது, முதலில் சில அதிர்வுகளும் குழப்பங்களும் ஏற்படத்தான் செய்யும்! ஆனால், சாதி என்ற அடையாளத்தை இழந்தாலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான உரிமைகளையும் சலுகைகளையும் யாரும் இழக்கமாட்டார்கள் என்பதை நடைமுறையில் அரசாங்கம் உறுதியோடு அமல்படுத்திக்காட்டினால்... சாதி ஒரு பொருட்டாகத் தோன்றாமல் போகும்.
சாதி அடையாளத்தைப் பிரதானமாக வைத்திருக்க விரும்புவோரின் மனங்களில் வேண்டுமானால், அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இப்போதைக்கு ‘சாதி’யை காகிதங்களில் இருந்து அழிப்போம்.
காலத்தின் ஓட்டத்தில் அவரவர் எண்ணங்களில் இருந்தும் ‘சாதி’ அடையாளம் தானாகவே நழுவிப்போகும்... பின், சமத்துவத்தை அணிகலனாக்கி சமுதாயம் மிடுக்கோடு நடைபோடும்!
------------------------------------
ஆனந்த விகடன் (26.09.2007)